மட்டக்களப்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள 400 குளங்களை புனரமைத்து அதன் மூலம் விவசாய செய்கையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிழடித்தீவில் உள்ள இறால் பண்ணையினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இரண்டாம் கட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள்,விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மகிழடித்தீவில் உள்ள இரால் பண்ணையினை மீள ஆரம்பிக்கும்செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது அதன் மூலம் ஏற்படும் சவால்களை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மகிழடித்தீவு,முதலைக்குடா,முனைக்காடு பிரதேச மக்களுக்கு குறித்த இரால் பண்ணையினை மீள இயக்கப்படுவதனால் மக்கள் ஏற்படும் மக்களுக்கு ஏற்படும் நன்மை தீகைள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட அபிவிருத்திக்குழுவினை கூட்டாமல் இருப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் கேள்வியெழுப்பப்பட்டது.இலங்கையின் அனைத்து மாவட்ட அபிவிருத்திக்குழுவும் கூட்டப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பில் மட்டும் கூட்டப்படாமல் இருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சிறையில் இருப்பதனால் கூட்டத்தினை பிற்போடமுடியாது எனவும் இருப்பவர்களைக்கொண்டு அபிவிருத்திக்குழு கூட்டத்தினை மீள ஆரம்பிக்கவேண்டும் என இங்கு சாணக்கியனால் கோரப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்ட நடவடிக்கையெடுப்பதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு